90ம் ஆண்டு புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் 19வது நினைவு தினம்!
1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் நினைவாக ஏறாவூரில் சுஹதாக்கள் தினம் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களின் 19 ஆவது ஆண்டினை நினைவுகூரும் முகமாக இன்று அப்பிரதேசத்தில் ‘சுஹதாக்கள் தினம்’ அனுஷ்டிக்கப்படுகிறது.
‘சுஹதாக்கள் நிறுவனம்’ விடுத்த அழைப்பின் பேரில் இப்பிரதேசத்திலுள்ள வியாபார நிலையங்கள், சந்தை, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
மாணவர் வரவின்மையால் பாடசாலைகள் இயங்காத போதிலும் க.பொ.த. உயர் தர பரீட்சைகள் சுமூகமாக நடைபெறுகின்றன. வெளியிடங்களுக்கான போக்குவரத்து வழமைபோல் நடைபெற்றாலும் உள்ளூர் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசாங்க காரியாலயங்கள் மற்றும் வங்கிகளின் வழமை நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலை புலிகள் 121 முஸ்லிம்களைக் படுகொலை செய்தனர். பள்ளிவாசல்களில் சுஹாதாக்களின் நினைவாக கத்த முல் குர் ஆன் ஓதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
அரசியல் ஞானம் இல்லாத சிலர் எமது கட்சியை அரசாங்கத்துடன் மோதவிட முயற்சி- கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்!
அரசியல் ஞானம் இல்லாத ஒரு சிலர் எமது கட்சியையும் எமது ஆட்சியையும் அரசாங்கத்துடன் மோத விட்டு வேடிக்கை பார்ப்பதற்கான பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என கிழக்கு மாகாண தலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டங்களைக் கிராமிய மற்றும் பிரதேச மட்டங்களில் விஸ்தரிக்கும் வேலைகளை ஆரம்பிக்கும் வகையில் வாகரைப் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கட்சியின் துணைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பிரதேசத்திலுள்ள கிராமங்களைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்இ
“கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு என நிலையான அரசியல் கட்சியென்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மட்டும் தான்.வாடகை வீட்டில் இருப்பது போல் இன்னொரு கட்சியில் இணைந்து செயல்படுவதன் மூலம் எமது மாகாணத்தின் தனித்துவத்தையோஇ எமது மக்களின் தனித்துவத்தையோ ஒரு போதும் பாதுகாக்க முடியாது.அப்படிப் போராட்டம் நடத்தினால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.
இப்படியான அரசியல் எமக்குச் சரிவராது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்துடன் நாம் கெளரவமான உறவினைப் பேணியே அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றோம். இப்படி செயல்படும் போது எமது மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் ஞானம் இல்லாத சிலர் அரசாங்கத்தையும் எம்மையும் மோத விட முயற்சிக்கின்றார்கள்.
இதன் மூலம் அரசியல் லாபத்தை அடையலாம் என நினைக்கின்றார்கள். இதையெல்லாம் கண்டு நாம் அஞ்சப்போவதும் இல்லை; அடி பணியப் போவதும் இல்லை.
அனைவருமே ஒருமித்து நின்று பேரம் பேசுகின்ற சக்தியாக மாறி அதனூடாக அபிவிருத்திகளை ஈட்ட வேண்டும். அதே போல் தமிழ் மக்கள் அனைவருமே நிதானமாகச் சிந்திக்கின்ற காலகட்டத்தில் நாம் அனைவரும் நிற்கின்றோம்.
எனவே எதிர்வரும் காலங்களில் எமக்கென்று பலம் சேர்ப்பதற்கும் அரசியலில் எமது மாகாணத்தின் இருப்பிடத்தை நிலைக்கச் செய்வதற்கும் நாம் அனைவரும் நிச்சயம் ஒற்றுமைப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வாகரைப் பிரதேச சபைத் தலைவர் எஸ்.கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
வவுனியா நகரசபையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற தயார்-TNA சிவசக்தி ஆனந்தன்!
வவுனியா நகரசபைக்குத் தெரிவு செய்யபட்டுள்ள ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பி்னர்கள் தயாராக இருப்பதாக இந்தத் தேர்தல் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் செயற்பட்டுவந்த அக்கட்சியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல் குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப்புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததும், தமிழ் மக்களுக்கான பிரச்சினையும் முடிவடைந்துவிட்டது என்று அரசாங்கம் கூறிவருகின்றது. அத்தகைய ஒரு நிலைப்பாட்டிலேயே யுத்தம் முடிந்த கையோடு அவசர அவசரமாக வவுனியா யாழ் நகரசபைகளுக்கான தேர்தலை நடத்தியுள்ளது.
இந்தத் தேர்தலானது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தேர்தலாகும். அரசாங்கம் கூறுவது போல யுத்தம் முடிந்ததும் தமிழ் பிரச்சினைகளும் முடிவடைந்துவிடவில்லை. அவர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. என்பதே எமது நிலைப்பாடாகும். அராசங்கம் கூறுவது போலல்லாமல் தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கும் உலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தும் வகையில் எமது கட்சியைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என நாங்கள் எமது தேர்தல் பிரசாரத்தின்போது மக்களைக் கேட்டுக்கொண்டோம்.
அதற்கு செவிசாய்த்து மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். இதன் மூலம் யுத்தத்தின் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டின் உண்மையான நிலையை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். இதற்காக எமது மக்களுக்கு எமது கட்சியின் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
வவுனியா நகரசபையைப் பொருத்த மட்டில் அந்த சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஏனைய கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து மக்களின் நலன்களுக்காக செயற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம்.
இந்தத் தேர்தலுக்கு முன்பும் கூட தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்பேசும் மக்களின் அரசியல் நலன்களுக்காக ஓர் அணியில் செயற்பட வேண்டிய தேவைகுறித்து வலியுறுத்தி வந்துள்ளோம். இது தொடர்பில் நாங்கள் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியிருக்கின்றோம். எனவே தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். வவுனியா நகரசபையைப் பொருத்த மட்டில் இந்த நகர மக்களுக்கு எவ்வளவோ சேவையாற்ற வேண்டியிருக்கின்றது. அந்த சேவைகளை இந்த சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பி்னர்களுடனும் இணைந்து செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
வன்னியில் மீள்குடியேற்றத்திற்கு அடையாளம் காணப்பட்ட கிராமங்களுக்குள் கண்ணிவெடிகள்!
வன்னியில் மக்களை மீளக்குடியமர்த்துவத ற்காக அடையாளம் காணப்பட்ட கிராமங்களுள் இன்னும் ஐந்து கிராமங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.
மீள்குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட 35 கிராமங்களில் ஏழில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டமை தெரியவந்திருந்தது. இதில் இரண்டு கிராமங்களில் ஏற்கனவே அவை அகற்றப்பட்டு விட்டன. எஞ்சிய கிராமங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தியிருப்பதாக அரச அதிபர் அறிவித்தார்.
அதே நேரம், மீள்குடியேறத் தெரிவானவர்களின் பெயர், விபரங்களைப் பொலிஸாருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் பாதுகாப்பு உத்தரவாதத்திற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதும், மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுமென்றும் அரச அதிபர் கூறினார்.
மீள்குடியேற்றம் சம்பந்தமான மீளாய்வுக் கூட்டமொன்று வவுனியா அரச அதிபர் தலைமையில் நேற்று (11) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டு தற்போதைய முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர்.
பாதை அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதுடன் பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்றவற்றை மீளமைக்கும் பணிகளும் செட்டிக்குளம் மற்றும் வவுனியா தெற்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
இதேநேரம், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் அடுத்த கட்டமாக 68 கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்கு புலிகளுக்கு வடகிழக்கில் அனுதாபம் உள்ளதை உணர்த்துகின்றது- புளொட் தலைவர்!
புளொட் தலைவர் த. சித்தார்த்தன் தலைமையில் வவுனியாவில் இன்று முற்பகல் ஊடகவியலாளர் மாநாடொன்று இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் நடந்துமுடிந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் தமது கட்சி நகரசபையைக் கைப்பற்ற முடியாமற் போனமைக்கான காரணம், இத்தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு வெற்றிபெற்றமைக்கான காரணம், புதிய நகரசபையில் தமது கட்சியின் பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பன தொடர்பில் அவர் செய்தியாளர்களுக்கு விளக்கியுள்ளார்.
இதுபற்றி அவர் தெரிவிக்கையில், எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில், நாங்கள் இந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் பெருவாரியான ஒரு வெற்றியைப் பெறுவோமென்றே எதிர்பார்த்தோம். நாங்கள் மாத்திரமல்ல இங்கிருக்கின்ற மக்கள் மற்றும் அரசியல் அவதானிகள் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் சில சம்பவங்கள் அந்த வெற்றியை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டிருக்கின்றன. தேர்தல் தினத்தன்று காலையில் ஆரம்பித்த சில அசம்பாவிதங்கள் பிற்பகல் 1மணிக்குப் பிறகு மாலைவரை மோசமடைந்து காணப்பட்டன.
அரச கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட மூன்று தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த அபேட்சகர்கள் எங்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய பகுதிகள் என்று கருதுகின்ற பகுதிகளில் உள்ள வாக்காளர்களை மிரட்டி, சில இடங்களிலே வீடுகளில் புகுந்து கூட தாக்கியிருக்கின்றார்கள். அத்துடன் அந்த மக்களைப் பயமுறுத்தி வெளியில் வந்து வாக்களிக்காத நிலைமையை உருவாக்கியிருந்தார்கள். இதன்காரணமாக நான் நம்புகின்றேன் 500 தொடக்கம் 1000 வாக்குகளை நாங்கள் அப்பகுதிகளில் இழந்திருக்கின்றோமென்று.
இது ஒரு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது அத்துடன் தமிழ்க்கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் அதாவது, வவுனியாவில் மாத்திரமல்ல வடகிழக்கில் இருக்கின்ற அனைத்துத் தமிழ்ப் பகுதிகளிலும் இன்று புலிகளுக்கு ஒரு அனுதாபமும் ஆதரவும் இருக்கிறதென்பதை என்னால் நிச்சயமாக உணரக்கூடியதாக இருந்தது. நான் வீடுவீடாகக் சென்று மக்களைச் சந்தித்துத் கதைத்தபோது அவர்களிடம் இன்றும் புலிகள்மீது அனுதாபமும் ஆதரவும் இருக்கிறதென்பது எனக்குத் தெரிந்தது. தமிழ்க்கூட்டமைப்பு என்பது புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பேயாகும்.
இந்த ரீதியிலே புலிகளின் ஆதரவாளர்கள் நிறையவே தமிழ்க் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். இதேவேளை இந்த புதிய நகரசபையைப் பொறுத்தமட்டில் ஊழலற்ற நிர்வாகத் திறனுள்ள மக்களுடைய தேவைகளை உணர்ந்து அவர்களுக்கான சேவைகளை சரிவர எடுத்துச் செல்வார்களானால் எங்களது அங்கத்தவர்கள் அதற்குப் பரிபூரண ஆதரவைக் வழங்குவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. எனவே மக்களின் தேவையை உணர்ந்து அவர்கள் செயற்பட்டார்களேயானால் எங்களது ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும்.
புலிகள் இன்னும் சில நாடுகளில் செயற்படுகின்றார்கள்- ஜனாதிபதி!
புலிகள் ஜரோப்பா மற்றும் தென்கிழக்காசிய போன்ற நாடுகளில் இன்னும் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரபாகரனின் கொல்லபட்டதன் பின்னர் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் என்று அழைக்கப்படும் புலிகளின் தலைவர் கைது செய்யப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பயங்கரவாத பிரச்சினை இலங்கையில் மாத்திரம் இல்லை. உலகெங்கும் உள்ளது அவர்கள் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்து கொண்டு ஒன்றாக இருந்து பேசும் அணுகுமுறையை முற்றாக நிறுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மடு தேவாலயத்திற்கு விசேட பேரூந்து சேவை!
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புனித மடு தேவாலய வருடாந்த உற்சவத்திற்காக இலங்கை போக்குவரத்து சபை விசேட போக்குவரத்து சேவையை நடைமுறைப் படுத்தியுள்ளது. குழுக்களாக மடு தேவாலயத்திற்குச் செல்லும் பொதுமக்கள் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். 37 பேர் கொண்ட குழுக்கள் இச்சேவைக்காக அருகில் உள்ள டிப்போவில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மொரட்டுவவில் இருந்து 40.000 ரூபாவும் புத்தளத்தில் இருந்து 32000 ரூபாவும் நீர்கொழும்பில் இருந்து 37000 ரூபாவும் வென்னப்புவையில் இருந்து 36000 ரூபாவும் சிலாபத்தில் இருந்து 35000 ரூபாவும் பயணக் கட்டடமாக அறவிடப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 15 ஆம் திகதி முடிவடைகிறது என்பது குறிப்பிடதக்கது.
யாழ் மாநகர முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவு!
யாழ் மாநகரசபையின் முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நிமிக்கப்பட்டுள்ளார். அரசுடன் இணைந்து யாழ் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி யாழ் மநகரசபையின் நிர்வாகத்தை கைப்பற்றியது. யாழ் மாநகர முதல்வராக யோகேஸ்வரியும், துணை முதல்வராக ஈ.பி.டி.பி உறுப்பினரும் முன்னைநாள் மாநகரசபை உறுப்பினருமான துரைராஜா இளங்கோ ஆகியோர் ஈ.பி.டி.பி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கே.பி. இப்போதைக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கபடமாட்டார்-கெஹலிய ரம்புக்வெல்ல!
கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்ற கே. பி இந்தியாவிடம் இப்போதைக்கு ஒப்படைக்கப்படமாட்டார். பதிலாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளலாம். சர்வதேச புரிந்துணர்வு அடிப்படையின் கீழ் இது அமையும் என அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டி பொல்கொல்லை கூட்டுறவு பயிற்சிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “புலிகள் இயக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் பொருட்டு பெரும் தொகையான உதவிகளையும் ஆதரவையும் வழங்கிய உள்நாட்டு, வெளிநாட்டு நபர்களை மற்றும் அமைப்புக்கள் பற்றி கைதாகி உள்ள கே.பி. மூலம் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
புலிகள் அமைப்பு கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவு, போதைப் பொருள் கடத்தல், நிதி மோசடி போன்றவை தொடர்பான பல தகவல்கள் இப்பொழுது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் கே. பி. என்ற குமரன் பத்மநாதன் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றார்.
இந்த அமைப்புக்கு உதவி ஒத்தாசை புரிந்த உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள், அமைப்புக்கள் என்பன பற்றி தகவல்கள் கிட்டியுள்ளன. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றில் அடங்குகின்றன.
பல தசாப்தங்களாக பதுங்கியிருந்த பிரபாகரனை மகாவீரன் என பூதாகரமாகக் காட்டி உலகை ஏமாற்றிய பலர் உள்ளனர். இதே நிலைக்கு கே.பி. யையும் கொண்டுவர பலர் முயற்சித்த விபரங்களையும் நாம் அறிவோம்.
பிரபாகரன் மரணித்த பின்னர் அதன் தலைமைப் பீடத்தை ஏற்றுக்கொள்ள இருப்பவரென கே.பி.யை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் யாவும் பொய்த்துவிட்டன என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது.
இவ்வாறு புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் களையும் பூதாகரமாகக் காட்டியதை எமது புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நிர்மூலமாக்கிவிட்டனர். உலகுக்கு அதன் உண்மையை வெளிக்காட்டியதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.